

பேனரில் விஜய் ஹெலிகாப்டரில் இருந்து தலைமை செயலகத்தின் மொட்டைமாடியில் இறங்குவது போல கிராபிக்ஸ் செய்திருந்தார்கள். அப்படியே விஜய் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டிருந்தால் தேவலை என்று நினைத்துக்கொண்டேன்.
வில்லு, குருவியென நான் பட்ட கொடுமைகளை ஒரு கையால் ஒதுக்கி வைத்து, “ஒரு தடவ கைய வச்சிட்ட அப்புறம் உன்னால யோசிக்கவே முடியாது” என்ற டிரெய்லர் பன்ச் வசனத்தை வசதியாக மறந்துவிட்டு சுறாவைக் காண சூறாவளியாக கிளம்பினேன்.
சட்டை பட்டனை போடாமல் திறந்த மார்போடு அதே திருமலை விஜய். ஆனால் இதுவரை போடாத கலர்களில் இருக்கின்றன அவர் அணியும் சட்டைகள். படத்தின் இரண்டாம் வித்தியாசம் அவரின் வீடு. கடற்கரையோரம் இருக்கிறது. இதுவரை எந்த விஜய் படத்திலும் இப்படி இருந்ததில்லை. அந்த குப்பத்தில் ஒரு போட்டி. யார் கடலின் நடுவே சென்று நிறைய மீன் பிடித்து வருகிறார்கள் என்ற போட்டி. வழக்கமாய் ரன்னிங் ரேஸ், கார் ரேஸ் என்றுதான் இருக்கும். ஆனால் இதில் வித்தியாசமாய் கடலில் ஒரு போட்டி. வழக்கம் போல் விஜய்தான் ஜெயிக்கிறார். ஜெயித்தவுடன் பாடல்.
வெற்றிக் கொடியேத்து..வீசும் நம்ம காத்து.
வழக்கமாக பாடல் முடிந்தவுடன் காமெடியன் வருவார். அதிலும் வித்தியாசம். முதலில் தமன்னாவை காட்டுகிறார்கள். அதன் பின்னே வடிவேலு வருகிறார். 50வது படமென்பதால் ஏதாவது வித்தியாசமாய் செய்ய வேண்டுமென்ற விஜயின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்துக் கொண்டு கதை செய்த இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அடுத்தடுத்த காட்சிகளில் இருவருக்கும் முட்டலும் மோதலுமாய் திரைக்கதை பயணிக்கிறது. நடுவில் குப்பத்தில் திருவிழா வருகிறது. சீரியல் பல்பு சகிதம் அடுத்த குத்திற்கு முக்கால் பேண்ட்டுடன் வருகிறார் விஜய்.
வங்க கடல் எல்லை. நான் சிங்கம் பெத்த பிள்ளை
வழக்கம் போல முழுப் பேண்ட் போடாதது, மார்க்கெட் போன நடிகையை ஆட வைக்காதது போன்றவை இந்தப் பாடலில் வித்தியாசமானவை. பாடல் முடிந்தவுடன் குப்பம் பற்றி எரிகிறது. துடித்து எழும் விஜய் சண்டை போடுகிறார். யார் இதற்கு காரணம் என்பதை யோசிக்கிறார். பின் அடுத்த நாள் தமன்னாவை சந்தித்து ரொமான்ஸ் செய்கிறார். முதலில் விஜய்க்கு காதல் வர உடனே ஃப்ளைட் பிடித்து நியிசிலாந்து சென்றுவிடுகிறார். பின்னாலே தமன்னாவும் தன்னைப் பற்றித்தான் பாடப்போகிறார் என்ற ஏக்கத்தோடு ஓடுகிறார். பாவம் அவர். விஜயின் பாடல் அவரை ஏமாற்றிவிடுகிறது.ஆம்
நான் நடந்தா அதிரடி..என் பேச்சு சரவெடி
என அங்கும் தன்னைப் பற்றியே பாடுகிறார் தளபதி. ஏமாற்றத்துடன் திரும்பும் தமன்னாவின் அப்பா, விஜயின் குப்பத்தை கோபுரமாக்க திட்டமிடுகிறார். அந்த இடத்தில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலும், பீச் ரிசார்ட்டும் கட்ட ஏற்பாடு செய்கிறார். அவர்தான் குடிசைகளை எரித்தவர் என்பது தெரியவர அவரின் வீட்டிற்கு சென்று அவரை அடித்துவிடுகிறார். அடித்ததோடு இல்லாமல் பன்ச் வசனமும் பேசிவிட கொதிக்கிறார் வில்லன்.
இதுவரை எறா. இனிமேல் சுறா என இடைவேளை விடுகிறார்கள். இடைவேளை விட்ட நேரம் கேட்டின் அருகில் சின்ன இடைவெளி விட்டிருந்தாலும் ஓடி வந்திருப்பேன். மூடிவிட்டார்கள். நானும் மூடிக் கொண்டு மீதி படத்தை காண சென்றேன். சற்று தாமதமாகிவிட்டது. அதற்குள் குப்பத்து விஜய் கோட்சூட்டுடன் நடந்துக் கொண்டிருந்தார்.
தமிழன் வீரத்தமிழன்.. தலைமை தாங்கும் ஒருவன்
என்று பாடிக் கொண்டிருந்தார் யாரோ. என்னடா.. தண்ணியடிச்சிட்டு திரிஞ்சவன் தண்ணி பாக்கெட் வாங்குற கேப்புல தலைவன் ஆயிட்டானா என்ற சந்தேகத்துடன் அமர்ந்தேன்.பாடல் முடிந்தவுடன் தமன்னா அவரைத் தேடி வந்தார். அவரைத் தெரியாது என்று சொல்லிவிடுகிறார் தலைவர். அழுதுக்கொண்டே செல்லும் தமன்னாவை பார்த்து “இதுதான் அவ கண்ணுல இருந்து வரும் கடைசி துளி கண்ணீர்” என்கிறார் விஜய். இது தமன்னா காதில் விழுந்துவிட உடனே பாடல்
சிறகடிக்கும் நிலவு. கரம்பிடித்தது என்னை
பாடல் முடிவதற்கும் ரிசார்ட் கட்ட வில்லனுக்கு அப்ரூவல் கிடைப்பதற்கும் சரியாக பொருந்திவிட சீறுகிறார் விஜய் வில்லனை நோக்கி. மீண்டும் சண்டை. மீண்டும் ஒரு பாடல். இந்த முறை
தஞ்சாவூர் ஜில்லாக்காரி கச்சேரிக்கு வாயேண்டி
அதன் பின் க்ளைமேக்ஸில் வில்லன் குழுவை பந்தாடிய பின் சுபம் போட்டார்கள்.
இனிமேல் விஜய் என்னதான் வித்தியாசமாய் நடித்தாலும் நான் என் முடிவை மாற்றிக் கொள்ளபோவதில்லை. வேட்டைக்காரன், வில்லு போன்ற முன்பழமைத்துவ காவியத்தை பார்த்துவிட்டு இனி விஜய் படமே பார்க்கக்கூடாது என்று எடுத்த அதே முடிவை இன்றும் எடுத்தேன். இனிமேல் விஜய் படம் கே டிவியில் கூட பார்க்கப்போவதில்லை.